வரும் 20-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி வரும் 20-ம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. நவகிரகத் தலங்களுள் சனிபகவானுக்குரிய தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு ஶ்ரீபிராணாம்பிகை சமேத தர்ப்பாரண்யேஸ்வரராகவும் ஶ்ரீ நடவிடங்க செண்பகத்தியாகேச பெருமானாகவும் இறைவன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இது தேவாரப் பாடல்பெற்ற தலம் ஆகும். இந்தத் தலத்தில் சனிபகவான் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். எனவே, இந்தத் தலத்தில் வழிபாடு செய்ய சனியின் பார்வையால் ஏற்படும் தீமைகள் விலகி நன்மை ஏற்படும்.
சனீஸ்வர பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பதை சனிப்பெயர்ச்சியாக வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு சனீஸ்வர பகவான் வரும் டிசம்பர் 20-ம் தேதி மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் திருநள்ளாறு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சக்கணக்கானோர் கூடும் நிலையில், கூட்டத்தை சமாளிக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு சாலைகளில் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவுள்ளன. இதே போன்று, பள்ளி, கல்லூரி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 20-ம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.