பள்ளி பேருந்து கோர விபத்து.. மாணவர்கள் காயம்.. ராஜஸ்தானில் பரபரப்பு!

 
Rajasthan

ராஜஸ்தானில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பினாகேர் மாவட்டத்தில் இன்று காலையில் பஜ்ஜு பகுதியில் தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 40 பள்ளி மாணவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பஜ்ஜு பகுதியில் உள்ள கால்வாய் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பஜ்ஜு போலீசார் பொதுமக்கள் உதவியுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

accident

விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்குள்ளான தனியார் பள்ளி பேருந்தில் 40 மாணவர்கள் இருந்தனர். அதில், 12-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். அவர்களுக்கு பஜ்ஜூவில் உள்ள பொது சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவர்கள் தற்போது நலமுடன் இருக்கின்றனர்.

Police

பேருந்து அதிவேகமாக சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால், சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய பிறகே விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாக தெரிய வரும்” என்றனர்.

From around the web