புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து ’செங்கோல்’.. அமித்ஷா வெளியிட்ட அறிவிப்பு!

 
Sengol

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கை முன்பாக செங்கோல் நிறுவப்பட உள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிவடைந்து, புதிய நாடாளுமன்றம் தயாராகி விட்டது.

Amit Shah

வருகிற 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஆனால், மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதாலும், நாட்டின் முதல் குடிமகள் என்பதாலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.

இதையடுத்து வரும் 28ம் தேதி திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை பாஜக அரசு ஏற்கவில்லை. இதையடுத்து திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

New Parliament

இந்நிலையில், புதிதாக திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த போது நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் எனவும், நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

From around the web