ஜி20 மாநாட்டில் மழை வெள்ளம்.. கேள்வி கேட்ட காங்கிரஸ்! வைரல் வீடியோ

 
Delhi

டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாடு அரங்கிற்குள் மழை நீர் புகுந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. அமெரிக்கா, இந்தியா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, இத்தாலி, இந்தோனேஷியா, மெக்சிகோ, பிரேசில், துருக்கி, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உள்ளார்கள்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மனி பிரதமர் ஏன்செலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா ஐநா தலைவர் ஆண்டோனியோ குட்டரஸ், உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் இதில் பங்கேற்று உள்ளார்கள்.

G20

நேற்று இந்த மாநாட்டின் முதல் நாளில் உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து அளித்தார். அதில், இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள், அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு துாதுவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் டெல்லியில் கொட்டிய மழை காரணமாக ஜி20 மாநாடு நடைபெறும் அரங்கில் மழை நீர் தேங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதை ட்விட்டரில் பதிவிட்டு உள்ள, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி சகெத் கோகலே, “பத்திரிக்கையாளரின் இந்த காணொளியின்படி, ஜி20 உச்சி மாநாட்டின் இடம் இன்று மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 4 ஆயிரம் கோடி செலவழித்த பிறகும் உள்கட்டமைப்பில் ஏற்பட்டு நிலை இதுதான். இந்த 4,000 கோடி ஜி20 நிதியில் மோடி அரசு எவ்வளவு ஊழல் செய்தது?” என்று குறிப்பிட்டு உள்ளார்.


இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வாழப்பாடி ராம சுகந்தன் எக்ஸில் பதிவிட்டு உள்ளதாவது, “2,700 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பாரத மண்டபம் ஒரே இரவில் பெய்த மழையால் பல் இளிக்கின்றது, முறையான வடிகால் அமைப்பு கூட இல்லை. தற்போது இயந்திரங்கள் தண்ணீரை அகற்றும் வேளையில் ஈடுபட்டிருக்கின்றன. தில்லியில் ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வருகின்ற குடிசைப் பகுதிகளை பச்சை நிற பதாகைகள் மூலம் மறைத்த மோடி அரசு இதனை சரியாக வடிவமைக்க தவறியது தேச அவமானம். மழை ஒரு தேசவிரோதி என்று தற்போது சங்கீகள் புலம்ப போகின்றார்கள்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

From around the web