எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்..! மக்களவை செயலகம் அறிவிப்பு.. தொண்டர்கள் அதிர்ச்சி!

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது. ராகுல் காந்தியின் இந்த தகுதி நீக்கம், தண்டனை அறிவிக்கப்பட்ட நேற்றைய நாளில் இருந்து அமலுக்கு வருகிறது என்று மக்களவை செயலகம் தெரிவித்து உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது காங்கிரஸ் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.