பயங்கரவாதத்தை ஒழிக்க இன்னும் கூர்மையாக திட்டங்கள் தீட்டப்பட்ட வேண்டும்..

 
Kashmir

மத அடிப்படைவாத பயங்கரவாதிகளை நாடே எதிர்க்கும் வேளையில் இதை சாக்காக வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மீதும் வன்மத்தை கக்கும் அறிவிலி வலதுசாரிகளுக்கு கடும் கண்டனம்.

ஜம்மு காஷ்மீரில் பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலில் 25 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடிய நிகழ்வு இந்தியர்கள் எல்லோரையும் உலுக்கிக்கொண்டு இருக்கும்போதே வலதுசாரிகள் தங்கள் வக்கிர அரசியலை உள்ளே நுழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தீவிரவாதிகள் மதவெறி பிடித்து தான் கொன்றிருக்கிறார்கள். அதற்கு மதவெறி பிடித்த தீவிரவாதிகளை வேட்டையாடுவதை, தண்டிப்பதை விட்டுவிட்டு எதற்காக ஒட்டுமொத்த "இஸ்லாமியர்கள்" மீது வன்மத்தை கக்க வேண்டும்? இங்கே இந்தியாவில் 20 கோடி இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். சில ஆயிரம் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எப்படி 20 கோடி இஸ்லாமியர்கள் பொறுப்பாக முடியும்?

இந்த கொடிய சம்பத்தை இங்கே வாழும் ஹிந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் சேர்ந்து தான் கண்டிக்கிறார்கள். பாகிஸ்தான் அரசு தான் இந்தியாவில் இயங்கும் பயங்கரவாதிகளுக்கு மூளையாக செயல்படுகிறது என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பாகிஸ்தான் அரசின் நரித்தனத்தை கட்டுப்படுத்த தவறியது யார்? பயங்கரவாதிகளை களை எடுக்க வேண்டியது யார்? இங்கே வாழும் ஹிந்துக்களா? 20 கோடி இஸ்லாமியர்களா அல்லது கிறிஸ்துவர்களா? அதிகாரம் மக்களிடமா இருக்கிறது? அதிகாரம் அரசிடம் இருக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நோக்கி கேள்வி கேட்க வேண்டும், கண்டிக்க வேண்டும்.

ஆனால் வலதுசாரிகள் கேட்டார்களா? கேட்க வேண்டியவர்களை கேட்காமல் பிரச்னையை மடைமாற்றுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? ஆர்டிகிள் 370-ஐ நீக்கிவிட்டோம் காஷ்மீரில் தீவிரவாதத்தை முடக்கிவிட்டோம் என்று பாஜக தம்பட்டம் அடித்துக்கொண்டதே! இது தான் முடக்கப்பட்ட லட்சணமா? காங்கிரஸ் 2004-2014 ஆண்டபோதும் பல முறை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவர்களை கையாலாகாத அரசு, தைரியம் இல்லாத கோழை அரசு என்று சொன்ன பாஜக இப்போது காங்கிரஸின் நிலையில் தானே நிற்கிறது?

எல்லாம் வெற்று அரசியல். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை பயங்கரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. அறிவு இல்லை ! தெம்பு இல்லை ! திராணி இல்லை ! பலமும் இல்லை ! இந்த தாக்குதல் எல்லையோரத்தில் நடந்த தாக்குதல் இல்லை. முக்கியமான சுற்றுலா தளத்தில் நடந்த தாக்குதல். பயங்கரவாதிகளால் எப்படி இலகுவாக தாக்குதல் நடத்த முடிந்தது? ஏன் அங்கே பாதுகாப்பு பணியில் யாரும் இல்லை?

ஒரு விடயம் நடக்கும் முன்பே தடுப்பது தான் உளவுத்துறையின் வேலை. ஆனால் இந்த தாக்குதலை ஏன் முன்கூட்டியே உளவுத்துறை மோப்பமிடவில்லை? கையாலாகாத உளவுத்துறையின் தோல்வியை வலதுசாரிகள் கேள்வி எழுப்பினர்களா? பயங்கரவாததையும் மோடி அரசு ஒழிக்கவில்லை, உளவுத்துறையும் வேலை செய்யவில்லை, ஆனால் பழியை பொத்தாம்பொதுவாக இஸ்லாமியர்கள் மீது போடுகிறார்கள். சுற்றுலா பயணிகளை காப்பாற்ற பயங்கரவாதிகளிடம் சண்டை செய்து உயிரை விட்ட சையதும் ஒரு இஸ்லாமியர் தான் !

இதுபோல் நாடு சுதந்திரம் அடைந்த 1947 முதல் 2025 வரை பல்லாயிரக்கணக்கான தலித்துகள் என்னும் ஹிந்துக்களை கொலை செய்து, கற்பழித்து, மலத்தை தின்ன வைத்து, சாதியை சொல்லி திட்டி பயங்கரவாதத்தில் ஈடுபட்ட அதே ஹிந்து சமூகத்தின் மற்ற சாதிவெறியர்களுக்கு எதிராக வலதுசாரி ஹிந்துக்கள் பொங்கினார்களா?

ஆர்எஸ்எஸ், பாஜக, வலதுசாரிகள், மீடியா என்றாவது தலித் ஹிந்துக்களுக்காக இப்படி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது உண்டா? ஒரு ஹிந்துக்கு நடக்கும் அநீதியை இன்னொரு ஹிந்து வேடிக்கை பார்ப்பது தான் சனாதன தர்மமா? ஒரே மதத்திற்குள் நடக்கும் அக்கிரமங்களை கேள்வி கேட்க வக்கற்ற வலதுசாரிகள் தலித் ஹிந்துக்களுக்காக என்று பொங்கி எழ போகிறார்கள்?

காஸ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். 25 பேர் கொலைக்கு காரணமான பயங்கரவாதிகளை மோடி அரசு வேட்டையாட வேண்டும். இதுவே ஒரு இந்தியராக என் எண்ணம். பயங்கரவாதத்தை ஒழிக்க இன்னும் கூர்மையாக திட்டங்கள் தீட்டப்பட்ட வேண்டும். அதே வேளையில் காஸ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை வலதுசாரிகளால் உருவாக்கப்பட்டு, வளர்த்துவிடப்பட்ட வேட்டை மிருகமான சாதிய பயங்கரவாதத்தில் இருந்து முதலில் தலித் ஹிந்துக்களை காப்பாற்றுங்கள்

- நண்பன்


 

From around the web