இனி எஸ்எஸ்சி தேர்வை தமிழிலும் எழுதலாம்... ஒன்றிய அரசு புதிய அறிவிப்பு!!

சிஆர்பிஎப் தேர்வைத் தொடர்ந்து எஸ்எஸ்சி தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒன்றிய அரசின் பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தேர்வு, நடத்தப்படுகிறது. இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தேர்வு இனி தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒன்றிய அரசின் பணிகளில் சமவாய்ப்பு கிடைக்கவேண்டும், மேலும் மொழிதடையால் ஒருவரது உரிமை பறிபோகக்கூடாது எனபதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.
இதனால் கிராமப்புறங்களில் இருந்து வரும் இளைஞர்கள், தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதி பலனடைய வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது.
ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இனி தேர்வு குறித்த அறிவிப்பு வரும் பட்சத்தில் இந்த முறை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒன்றிய ஆயுத படை தேர்வான, சிஏபிஎப் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுதுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.