ஒடியா மொழியை கட்டாயமாக்கு! ஒடிசா மாநிலத்தில் வெடித்தது போராட்டம்!!

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை விவகாரம் கிளம்பிய பிறகு தமிழ்நாடு அரசு தரப்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இரு மொழிக் கொள்கை தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஒன்றிய அரசு தர மறுத்த பணத்தை தமிழ்நாடு அரசே பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. முதலமைச்சரின் பேச்சுகளும். பதிவுகளும் வட இந்தியாவிலும் தென்னகத்தின் பிற மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் மொழிக்கான ஆதரவு பெருகி வருகிறது.
கர்நாடகாவில் பள்ளிகளில் இந்திப்பாடத்திற்கு தேர்வுகள் கட்டாயமாக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றனர். ஒன்றிய அரசு அலுவலகங்களில் கன்னடம் தெரிந்தவர்களையே பணியமர்த்த வேண்டும் என்ற போராட்டங்களும் கர்நாடகாவில் தொடங்கியுள்ளது. மேற்கு வங்காளத்தில் பாஜக தலைவரே வங்காள மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்.இந்நிலையில் பாஜக ஆட்சி செய்யும் ஒடிசா மாநிலத்திலும் ஒடியா மொழிக்கு ஆதரவான போராட்டங்கள் தொடங்கியுள்ளன.
ஒடிசா மாநிலத்தில் ஒடியா மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும். ஒடியா மொழியை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பொதுமக்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தியா முழுவதும் தாய்மொழி மீதான பற்றும், அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வமும் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.