கொரோனாவால் தொழிலில் நஷ்டம்... ஏமாற்றிய ஊழியர்கள்... மனைவி, மகன்களை குத்திக் கொன்ற நபர்..! டெல்லியில் பகீர் சம்பவம்

 
Delhi

டெல்லியில் கடன் தொல்லையால் மனைவி மற்றும் 2 மகன்களை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

டெல்லியின் மோகன் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் (38). இவரது மனைவி சுனிதா. இந்த தம்பதிக்கு 5 வயது, 4 மாத குழந்தை என இரு மகன்கள் இருந்தனர். ராஜேஷ் ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனம் கொரோனா ஊரடங்கு காலத்தில் நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

murder

தொழில் மோசமடையவே கடன் நெருக்கடிக்கு ஆளான ராஜேஷ், தொழிலை நிறுத்திவிட்டு கடை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் நேரத்தில் தனது மனைவி சுனிதா, 5 வயது மகன், 4 மாத குழந்தை ஆகிய மூவரையும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தனது கை மணிக்கட்டையும் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் நடைபெறும் முன்பாக நீண்ட பதிவு ஒன்றை தனது வாட்ஸ்ஆப் நண்பர்கள் குழுவில் போஸ்ட் செய்துள்ளார். அதில், “நான் கடும் கடன் சுமையில் இருக்கிறேன். கோவிட் லாக்டவுன் காலத்தில் எனது தொழில் பெரும் பாதிப்பு கண்டது. எனது ஊழியர்கள் என்னை ஏமாற்றி வாடிக்கையாளர்களை போட்டி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தனர். பல பேரின் மோசடியால் கடும் பண நெருக்கடிக்கு ஆளாகியுள்ளேன்” என நீண்ட பதிவை எழுதியுள்ளார்.

Dead

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷின் நண்பர்கள், அவரது சகோதரருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக ராஜேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ராஜேஷ், மனைவி, இரு குழந்தைகள் நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். மனைவி, மகன்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராஜேஷ் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web