மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம்

 
Neet

விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில், மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்கி தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை தொடர்பாக ‘நீட்’ தேசிய தகுதித் தேர்வை எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஒன்றிய அரசும் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர கண்டிப்பாக ‘நீட்’ தேர்வை எழுத வேண்டும்.

அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியாக நீட் தேர்வு நடைபெறுகிறது.

Neet

இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி முதல் கடந்த மாதம் (மார்ச்) 16-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. சுமார் 20 லட்சம் பேர் வரை நாடு முழுவதும் விண்ணப்பப் பதிவு மேற்கொண்டுள்ளனர்.

விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில், தற்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்து விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள மறுவாய்ப்பு கேட்டு கோரிக்கை தேசிய தேர்வு முகமைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்த கோரிக்கையின் அடிப்படையில் தேசிய தேர்வு முகமை இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாளும் (புதன்கிழமை) என 2 நாட்களுக்கு அவகாசம் வழங்கியுள்ளது.

NEET

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://nta.ac.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

From around the web