குஜராத்தில் கோர விபத்து.. 2 பேருந்துகள் இடையே சிக்கி ஒருவர் பலி.. 7 பேர் படுகாயம்.. சிசிடிவி வீடியோ!
![Surat](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/2d45f6696d68baed1aeb8f3f557ebb36.webp)
குஜராத்தில் 2 பேருந்துகள் இடையே சிக்கிய 4 இருசக்கர வாகனங்கள் நசுங்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் முன் செல்லும் பேருந்து ஒன்றினை பின்தொடர்ந்து 4 இருசக்கர வாகனம் விரைந்தபோது விபத்து நேரிட்டது. முன்சென்ற பேருந்து திடீரென பிரேக் போட்டபோது, அதனை எதிர்பாரதவிதமாக 4 இருசக்கர வாகனங்களும் பேருந்தின் பின்பக்கமாக மோதின.
அதே நேரம் அடுத்து விரைந்து வந்த இன்னொரு பேருந்தும், முன்சென்ற பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு பேருந்துகளுக்கும் இடையே 4 இருசக்கர வாகனங்களும் சிக்கி நசுங்கின. தலா இருவர் என 4 இருசக்கர வாகனங்களிலும் பயணித்து வந்த 8 பேர், இரு பேருந்துகளுக்கும் இடையே சிக்கி படுகாயமடைந்தனர்.
இந்த கோர விபத்தில் பிகா சோனவானே (48) என்ற நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முன்சென்ற பேருந்து, ஆட்டோ ஒன்றின் மீதான மோதலை தவிர்ப்பதற்காக திடீர் பிரேக் போட்டதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
સુરતમાં BRTS બસ વચ્ચેના અકસ્માતના ધ્રુજાવી મૂકે તેવા ફૂટેજ સામે આવ્યા#Surat #Accident pic.twitter.com/cIWFsWNU7v
— Gujarat Tak (@GujaratTak) December 23, 2023
போதிய இடைவெளிவிட்டு பேருந்தினை பின்தொடராத 4 இருசக்கர வாகனங்களும் விபத்துக்கு ஆளாகி உள்ளன. இவற்றைவிட கட்டுப்பாடில்லாத வேகத்தில் அடுத்து வந்த 2வது பேருந்தும், சாதாரண விபத்தை கோர விபத்தாக மாற்றியுள்ளன. இதனால் சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயன்ற இரண்டாவது பேருந்தின் ஓட்டுநரை பொதுமக்களே பிடித்து போலீசார் வசம் ஒப்படைத்துள்ளனர்.