ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி பலி.. உயிருடன் மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பலி!

 
MP

மத்தியபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 5 வயது பெண் குழந்தை இன்று அதிகாலை மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் போடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிப்லியா ரசோடா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி மஹி. இந்த சிறுமி நேற்று கிராமத்தில் தனது மாமா வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுமி தவறி விழுந்தாள்.

இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் 22 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட சிறுமியை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகே புல்டோசர் மூலம் பள்ளம் தோண்டப்பட்டன.

Borewell

மேலும், குழந்தைக்கு சுவாசக்காற்று கிடைக்கும் வகையில் ஆழ்துளை கிணற்று குழிக்குள் ஆக்ஸிஜனும் செலுத்தப்பட்டது. குழந்தையை மீட்பதற்கு தேவையான நடவடிக்கையை அம்மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் செளஹானும் விரைவுபடுத்தினார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் குழந்தை மஹி மீட்கப்பட்டாள். உடனே அங்கிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் போபாலில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹமீதியா மருத்துவமனையில் அந்தக் சிறுமி சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்தாள்.


பிரதே பரிசோதனைக்குப் பின்னர் குழந்தை மஹியின் உடல் அவுளது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராஜ்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ் மீனா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web