இரவில் ஓட்டுநர்களுக்கு இலவச டீ.. ஒடிசா அரசு அறிவிப்பு!

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு இலவச டீ வழங்க ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் பயணிக்கும் போது ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றால் ஓட்டுநர்கள் கவனம் சிதறாமல் தூக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு ஒடிசா மாநில அரசு தற்போது வரவுள்ள சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதையடுத்து இன்று முதல் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஒடிசா மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அருகே தாபா அருகில் அந்தந்த பகுதி ஆர்டிஓ சார்பில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக டீ வழங்க அம்மாநில போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை நம் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சாஹு வெளியிட்டுள்ளார்.
சூடான இந்த டீ அருந்தினால் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு விழிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும் என நம்பப்படுகிறது. இதற்காக அம்மாநிலத்தில் உள்ள ஆர்டிஓ-க்கள் சுங்கச்சாவடி அருகே உள்ள ஹோட்டல்கள் மூலம் டீ ஏற்பாடு செய்து ஓட்டுநர்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக ஒவ்வொரு ஆர்டிஓவிற்கும் ரூ. 5,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து அவர்கள் வரும் ஜனவரி மாதம் 7-ம் தேதி வரை இந்த இலவச டீ வழங்கும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#WATCH | Bhubaneswar, Odisha: Free tea is being provided to truck drivers at the dhabas located near highways ahead of the Road Safety Week starting on January 1, 2024, as the Odisha government directs all the regional transport officers to provide free tea to the truck drivers… pic.twitter.com/h0p9kjPO9G
— ANI (@ANI) December 22, 2023
இதன் மூலம் ஓட்டுநர்களுக்கு இலவச டீ மட்டுமல்லாமல் தங்கள் டிரைவிங்கில் சிறிது நேரம் ஓய்வும் கிடைக்கிறது. இதன் மூலம் அவர்கள் புத்துணர்வு பெற்று மீண்டும் தூக்க கலக்கம் இல்லாமல் தொடர்ந்து வாகனம் ஓட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக தேசிய நெடுஞ்சாலை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு இலவச டீ வழங்கும் பொறுப்பை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.