முன்னாள் முதல்வர் மாரடைப்பால் காலமானார்.. அதிகாலையில் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86.
மகாராஷ்டிர மாநிலம் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மனோகர் ஜோஷி. இவர் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நந்தவி கிராமத்தில் 1937-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி பிறந்தார். 1967-ம் ஆண்டு அரசியலில் நுழைந்த இவர், சிவசேனா கட்சியில் 40 ஆண்டுகள் பணியாற்றினார். 1968-70 காலக்கட்டத்தில் மும்பை மாநகராட்சி கவுன்சிலராக தேர்வானார் 1976 - 77 காலக்கட்டத்தில் மும்பையின் மேயராகவும் பணியாற்றியுள்ளார்.
மகாராஷ்டிர மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 3 முறை அந்த பதவியில் இருந்தார். பின்னர் 1990-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரானார். 1990 - 91 காலக்கட்டத்தில் மகாராஷ்டிர சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக செயலாற்றினார். சிவசேனா கட்சி பிளவுபடுவதற்கு முன்னர் அக்கட்சியில் இருந்து முதல்வராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995 முதல் 1999 வரை அவர் முதல்வராக பதவி வகித்தார்.
1999 மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு மத்திய மக்களவைத் தொகுதியில் சிவசேனா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002 முதல் 2004 வரை பாஜக ஆட்சிக்காலத்தில் மக்களவையில் சபாநாயகராக பணியாற்றினார். கடந்த ஆண்டு மே மாதம் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதில் ஜோஷியின் உடல்நிலை மோசமானது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஓரிரு நாட்கள் அரை மயக்க நிலையில் இருந்தார். எனினும் குணமடையாததால் தனது வீட்டிலேயே மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.
இந்த நிலையில் நெஞ்சு வலி காரணமாக மும்பையின் பிடி இந்துஜா மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகளை சிவாஜி பார்க் சுடுகாட்டில் பிற்பகல் 3 மணிக்கு நடத்த உள்ளதாகவும், அவரின் உடல் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.