விவசாயிகளுக்கு ரூ. 36,000 பென்ஷன்.. பிஎம் கிசான் மாந்தன் யோஜனா திட்டத்தில் சேருங்க!

விவசாயிகளின் எதிர்காலத்தை மேம்படுத்த பிஎம் கிசான் மாந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஒன்றிய அரசு விவசாயிகள் நலனுக்காகப் பல திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பாகப் பிரதான் மந்திரி சம்மன் நிதி அதாவது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு 3 தவணையாக 2,000 ரூபாய் வீதம் வருடம் 6,000 ரூபாய் அளவிலான தொகையை விவசாயிகளின் நலனுக்காக வழங்கப்படுகிறது. இதுவரை 15 தவணைகள் மூலம் விவசாயிகளுக்குப் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மொத்தம் 30,000 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் தற்போதைய பொருளாதார பிரச்சனைகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் என நம்பப்படும் நிலையில், ஒய்வு காலத்தில் விவசாயிகளைக் காப்பாற்றும் விதமாக ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பெறும் திட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு முதலீட்டுத் திட்டம். இத்திட்டத்தில் முதலீடு செய்யப் பிஎம் கிஸ்சான் திட்ட வாடிக்கையாளர்கள் எவ்விதமான ஆவணத்தையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
இந்தத் திட்டத்தின் கீழ் நீங்களும் ஓய்வூதியம் பெற விரும்பினால் சில தகுதிகள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் விதிமுறைகள் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும். அதேபோல, அந்த விவசாயிகளுக்கு 2 ஹெக்டேர் நிலம் இருக்க வேண்டும். நீங்கள் 18 வயது நிரம்பியவராக இருந்து, இந்தத் திட்டத்தில் சேர்ந்தால் மாதம் 55 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். 30 வயதில் இந்த தொகை, 110 ரூபாயாகவும், 40 வயதில் 200 ரூபாயாகவும் அதிகரிக்கிறது. விவசாயிகள் 60 வயது வரை இத்தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு முதலில் நீங்கள் அருகில் உள்ள பொதுச் சேவை மையத்துக்கு செல்ல வேண்டும். அங்கே உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் மற்றும் உங்கள் நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். நிதியுதவியைப் பெற உங்களிடம் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அதன் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஓய்வூதிய கணக்கு எண் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் நீங்கள் ஆன்லைனிலும் பதிவு செய்யலாம். இதற்கு நீங்கள் maandhan.in என்ற முகவரிக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். மொபைல் எண், OTP போன்ற அனைத்து தகவல்களும் நிரப்பப்பட வேண்டும். அனைத்து தகவல்களும் ஆன்லைன் படிவத்தில் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக 3,000 ரூபாய் வழங்கப்படும். இதை ஆண்டுதோறும் கணக்கிட்டால் விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக 36,000 ரூபாய் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் தொகையைக் கொண்டு உங்கள் ஓய்வுக் காலத்தில் பண நெருக்கடி இல்லாமல் வாழலாம்.