ஓடும் ரயிலில் தீ.. பயத்தில் கீழே விழுந்த 3 பேர் பலி.. 8 பேர் படுகாயம்.. குற்றவாளி தப்பி செல்லும் பரபரப்பு காட்சிகள்!
கேரளாவில் ஓடி கொண்டிருந்த ரயிலில் பெண் உட்பட பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயில் நேற்று இரவு சென்றுக்கொண்டிருந்தது. இரவு 9.37 மணிக்கு டி1 கோச்சில் பயணம் செய்த பெண் உட்பட பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மர்மநபர் ஒருவர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இரண்டு பாட்டில் பெட்ரோல் உடன் ரயிலின் உள்ளே புகுந்த மர்ம நபர் டி1 கோச்சில் பயணம் செய்த பெண் உட்பட பயணிகளின் மீது திடீரென பெட்ரோல் ஊற்றிய பின் தீ பற்ற வைத்துள்ளார். இதனை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலி இழுத்து ரயிலை நிறுத்தினர். அந்த நேரத்தில் ரயிலில் இருந்து அந்த நபர் வெளியே குதித்து தப்பி ஓடி உள்ளதாக பயணிகள் கூறி உள்ளனர்.
தொடர்ந்து ரயில்வே போலீசார் மற்றும் எலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொது மக்கள் தீ காயம் அடைந்த பயணிகளை 8 பேரை மீட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தலை மறைவான மர்ம நபரை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், ஏடிஜிபி கோழிக்கோடு மேயர் உட்பட அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ரயில் தண்டவாளத்தில் இருந்து ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை என 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. தீயில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து வெளியேற முயன்ற போது கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவித்தனர். தீ வைத்த நபர் தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் போலீசார் கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகின்றனர்.
CCTV footage of the suspect who ruthlessly set his co-passengers on fire on board the Alappuzha-Kannur Executive Express train near Elathur in Kozhikode district on Sunday night.#Kerala #KeralaNews #CrimeNews #Kozhikode pic.twitter.com/fHdAIkvsy7
— Prathamesh Aparna Arvind Kharade (@PrathameshK98) April 3, 2023
தப்பி ஓடிய மர்ம நபர் பிடிபட்டால் மட்டுமே இந்த தாக்குதல் சம்பவத்தின் நோக்கம் என்னவென்று தெரியவரும். இரவு நேரத்தில் விரைவு ரயிலில் பெட்ரோல் உடன் மர்ம நபர் புகுந்து தீ விபத்து ஏற்படுத்தி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு தப்பி சென்ற சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்புயும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தப்பியோடிய குற்றவாளியின் உருவப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.