பகீர்.. குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த தாய்!
![murder](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded_original/f8adf1c66ba4dfef63f07da46c0c5c95.webp)
மகாராஷ்டிராவில் கணவன் சித்ரவதை செய்ததால் இளம்பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள கோனார்க் நகர் பகுதியில் உள்ள ஹரி வந்தன் அடுக்குமாடி மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அஸ்வினி நிகும்ப் (30). இவருக்கு ஆராத்யா (8), அகஸ்தியா (2) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். அஷ்வினிக்கும், அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் அஸ்வினி திடீரென அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அஸ்வினியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு அவரது இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்தனர். மேலும், அஸ்வினி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், கணவர் தன்னை சித்ரவதை செய்வதாகவும் அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அஸ்வினி எழுதியிருந்தார்.
மேலும், அஸ்வினி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன்னுடைய உறவினர்களுக்கு ஒரு வீடியோவையும் அனுப்பியுள்ளார். அதில் தனது தற்கொலைக்கு கணவர் ஸ்வப்னில் தான் காரணம் என்றும் கூறியுள்ளார். அஸ்வினியின் கணவர் ஸ்வப்னில் பணி நிமித்தமாக புனேவில் இருந்துள்ளார். அவருக்கு தகவல் தெரிவித்த போலீசார், விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.