ஏரியில் குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை.. தேர்வில் தோல்வி அடைந்த பயத்தில் விபரீதம்!
![Karnataka](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/6b5d9e316d2cb6616029cc101342d084.webp)
கர்நாடகாவில் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், தந்தைக்கு பயந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா ஜிகினி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விஜய்சங்கர். இவரது மகன் அம்ருதேஷ் (21). இவர்களது சொந்த ஊர் பீகார் ஆகும். பல ஆண்டுகளாக விஜய்சங்கர் குடும்பத்துடன் ஜிகனியில் வசித்து வருகிறார். இவரது மகன் அம்ருதேஷ், பெங்களூரு - மைசூரு சாலையிங் உள்ள தனியார் கல்லூரியில் அம்ருதேஷ் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
அவர், கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஜிகினி ஏரியில் குதித்து அம்ருதேஷ் தற்கொலை செய்து கொண்டார். மகனை காணவில்லை என்று விஜய்சங்கர் தேடிய போது தான் அம்ருதேஷ் ஏரியில் சடலமாக மிதப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜிகினி போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில் அவர் தோல்வி அடைந்திருந்தார். தேர்வில் தோல்வி அடைந்ததாலும், தந்தைக்கு பயந்தும் அவர் தற்கொலை முடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.