மனைவியின் நடத்தையில் தீராத சந்தேகம்.. நண்பருடன் திட்டமிட்டு தீர்த்துக் கட்டிய கொடூர கணவர்!

 
Karnataka

கர்நாடகாவில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது நண்பரின் உதவியுடன் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை போல நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு மகாலட்சுமி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி பிரேமலதா. இவர் கடந்த 4-ம் தேதி வீட்டில் 5 அடி உயரமுள்ள ஜன்னலில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரேமலதா இறந்து கிடந்தார். முதலில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் நினைத்த நலையில், தரையில் கால்கள் உரசிய படி உடல் இருந்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. அவரது கணவர் சிவசங்கருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மனைவி வேறு நபருடன் உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை ஏமாற்றுவதாக அவர் புலம்பினார். அத்துடன் தனது வீட்டிற்கு வெளியாள் வருவதாக நினைத்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

Murder

மேலும், தனது மனைவியைக் கண்காணிக்க வீட்டில் சிசிடிவி கேமராவை சிவசங்கர் பொருத்தினார். ஆனால், அதில் அவர் எதிர்பார்த்த எந்த காட்சியும் கிடைக்கவில்லை. இதன் பின் மாந்தீகர் உதவியுடன் தன் மனைவியின் நடத்தையில் உள்ள சந்தேகத்தை களைய முயன்றார். ஆனால், அதிலும் அவருக்குத் தோல்வியே ஏற்பட்டது.

இந்த நிலையில், வங்கி வேலை தொடர்பாக வினய் என்பவர் சிவசங்கருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் தனது மனைவியைக் கொலை செய்த வழக்கில் சிறை சென்றவர் ஆவார். தனது மனைவியை கொலை செய்ய வேண்டும் என்று வினயிடம் பேரம் பேசியுள்ளார். அதன்படி பணமும் கைமாறியுள்ளது. அத்துடன் சாட்சி எதுவும் கிடைக்கக்கூடாது என்பதற்காக தனது வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவையும் சிவசங்கர் அகற்றியுள்ளார்.

arrest

அவர் பேசியபடி கடந்த 4-ம் தேதி சிவசங்கர் வீட்டிற்கு வந்த வினய், பிரேமலதாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இதன்பின் அவர் தற்கொலை செய்து கொண்டது போல தூக்கில் தொங்க விட்டு விட்டு தப்பியோடி விட்டார். இந்த நிலையில் இக்குற்றத்தில் ஈடுபட்ட வினய் குறித்த ஆதாரம் கிடைக்காமல் போலீசார் திணறினர். 200-க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்த போது, அதில் வினய் சிக்கினார்.

இதையடுத்து பிரேமலதாவை கொலை செய்த வழக்கில் அவரது கணவர் சிவசங்கர், வினய் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web