தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி... ட்விட்டரில் Bio-வை மாற்றிய ராகுல் காந்தி..!

எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ட்விட்டரில் பயோவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது. ராகுல் காந்தியின் இந்த தகுதி நீக்கம், தண்டனை அறிவிக்கப்பட்ட நேற்றைய நாளில் இருந்து அமலுக்கு வருகிறது என்று மக்களவை செயலகம் அறிவித்தது.
இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தகுதிநீக்கத்திற்காக தான் அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்த ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் கண்ணில் பயம் தெரிவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சுயவிவரங்கள் குறிப்பிடும் இடத்தில் (பயோ), காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்பதோடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் கவனிக்கத் தகுந்ததாக மாறியுள்ளது.