10 வயதில் பாம்பு கடியால் மரணம்... 15 வருடங்களுக்கு பிறகு உயிருடன் வந்த இளைஞர்!! உபியில் ஆச்சரியம்!!

 
UP

உத்தரபிரதேசத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த 10 வயது சிறுவனின் உடலை வாழை மட்டையில் சுற்றி, ஆற்றில் வீசினர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் திரும்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் திவாரியா மாவட்டம், பகல்பூர் தொகுதிக்கு உட்பட்ட முரசோ கிராமத்தில் வசித்து வருபவர் ராம் சுமர் யாதவ். இவரது மகன் அங்கேஷ் யாதவ். இவருக்கு 10 வயது இருக்கும் போது அதாவது கடந்த 15 வருடங்களுக்கு முன் சிறுவனை பாம்பு கடித்தது. விஷப்பாம்பு கடித்ததால் வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்தார். அங்கேஷை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, குடும்ப உறுப்பினர்கள் மந்திரீத்து உள்ளனர். 

பின்னர் சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதை தொடர்ந்து அவர்களது கிராம வழக்கப்படி, அங்கேஷ் வாழைத்தண்டில் சுற்றப்பட்டு சரயு ஆற்றில் விடப்பட்டார். ஆனால் இறந்துவிட்டதாக கருதப்பட்ட அங்கேஷ் 15 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பி உள்ளார். இதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இறந்த நிலையில் ஆற்றில் விடப்பட்ட அவர் எப்படி உயிர் பிழைத்தார் என்று அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு நடந்ததை விளக்கினார் அங்கேஷ்.

snake

“பாம்பு கடித்து என்ன ஆனது என்று தெரியவில்லை. சுயநினைவு வந்து கண்களைத் திறக்கும் போது பீகார் தலைநகர் பாட்னா அருகே அமன் மாலி என்ற பாம்பு பிடிப்பவருடன் இருந்தேன். என்னை அவர்தான் வளர்த்தார். பாம்பு பிடிக்க அவருடன் பல இடங்களுக்கு பயணித்தேன். கதிஹாராவில் சில நாட்கள் தங்கியிருந்தேன். பிறகு அமனுடன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சென்றேன். அங்கே ஒரு வீட்டு உரிமையாளரிடம் சில நாட்கள் வேலை செய்தேன் என கூறினார். 

அமிர்தசரசில் தனது கடந்த காலத்தைப் பற்றி அங்கேஷ் ஒரு லாரி ஓட்டுநரிடம் கூறியபோது, அவரை தன்னுடன் உத்தரபிரதேசத்தில் உள்ள அசம்கருக்கு அழைத்து வந்துள்ளார். தன் ஊரைப் பற்றியும், தனக்கு நினைவில் இருக்கும் நபர்களின் பெயர்களையும் கூறி உள்ளார். அங்கிருந்தவர்களில் ஒருவர் அங்கேஷைப் படம் பிடித்து முரசோ கிராமத்தில் தனக்குத் தெரிந்த ஒருவருக்கு அனுப்பினார். மேலும் அங்கேஷ் தனது குடும்பத்தினரை சந்திக்க மணியார் காவல் நிலையத்தை அணுகி தனது கடந்த காலத்தை விளக்கினார். 

UP

இதை தொடர்ந்து போலீசார் அங்கேஷ் பெற்றோரை கண்டுபிடித்து தகவல் தெரிவித்தனர். காவல் நிலையத்திற்கு வந்த தாய் கலாவதி தேவி, மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களை அங்கேஷ் அடையாளம் காட்டினார். மேலும் அவர்களின் மகன் என்பதை நிரூபிக்க. கிராமத்தில் உள்ள தன் பால்ய நண்பர்கள், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களின் பெயர்களை கூறி உள்ளார். போலீசார், அவர் அங்கேஷ் என்பதை உறுதி செய்து, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். 15 வருடங்களுக்கு முன் பாம்பு கடித்து இறந்ததாக நினைத்த ஒருவர் திரும்பி வந்தது குறித்து அறிந்ததும் கிராம மக்கள் அவரை கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.

From around the web