நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 16-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

 
NEET

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை தொடர்பாக ‘நீட்’ தேசிய தகுதித் தேர்வை எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஒன்றிய அரசும் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர கண்டிப்பாக ‘நீட்’ தேர்வை எழுத வேண்டும்.

Neet

அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியாக நீட் தேர்வு நடைபெறுகிறது.

இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று இரவுடன் நிறைவு பெற இருந்தது.

Neet

இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 16-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மார்ச் 16-ம் தேதி இரவு 10.50 மணி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரவு 11.50 மணி வரை அதற்கான கட்டணத்தைச் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது.

From around the web