கேரளாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோனா.. 24 மணி நேரத்தில் 230 பேர் பாதிப்பு... 3 பேர் பலி!

கேரளாவில் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் நீடித்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 69.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் இருந்து உலகம் தற்போது மீண்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த அலெக்ஸ் வர்கீஸ் (70), கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவர் ஒரு இருதய நோயாளி என்பது தெரியவந்துள்ளது. சுகாதார ஊழியரான அவரது மகனிடம் இருந்து அலெக்ஸ் வர்கீஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில மருத்துவத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், தாங்கள் பரிசோதனைகளை குறைக்கவில்லை எனத் தெரிவித்தார். கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படுவதை விட இணை நோய் உள்ளவர்கள் இறப்பை சந்தித்து வருவதாகவும் கூறினார். இறுதிச் சடங்கின் போது நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.
2020-ம் ஆண்டு முதல் கொரோனா தரவை உன்னிப்பாகக் கவனித்து வரும் கேரள சுகாதாரத் துறை, இந்த மாதத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள 8 கொரோனா இறப்புகளில் 3 கேரளாவில் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.