குடியுரிமை திருத்தச்சட்டம்.. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அமல்படுத்திய ஒன்றிய அரசு!

 
CAA

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு குடியுரிமை அளிக்கும் 2019-ம் ஆண்டு திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றி இருந்தது. விரைவில் இது நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்து இருந்தது.

CAA

இந்த அறிவிப்பின் மூலமாக அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருகை தந்தால், ஐந்து வருடங்கள் அவங்கள் இங்கு தங்கியிருந்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பிற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் வரவேற்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பாகவே இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. அதன்படி சிஏஏ சட்டம் அரசிதழில் வெளியானதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் உள்ளிட்டோருக்கும், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும் எதிரானது என தமிழ்நாடு, மேற்கு வங்க மாநில அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web