மொழியால் இணைந்த அண்ணன் தம்பிகள்.. மஹாராஷ்ட்ராவில் திடீர் திருப்பம்!!

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வந்த அண்ணன் தம்பிகளான உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும் இணைந்து செயல்பட முன்வந்துள்ளார்கள். பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரே தான் சிவசேனாவில் முதலில் வேகமாக செயல்பட்டு வந்தார். ஆனால் பெரியப்பாவுடன் ஏற்பட்ட மனத்தாங்கலால் கட்சியிலிருந்து விலகினார். மகன் உத்தவ் தாக்கரே வை முன்னிறுத்தினார் பால் தாக்கரே.
மஹாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் ராஜ் தாக்கரே. சிவசேனாவுக்கு எதிரணியில் கூட்டணி அமைத்து தேர்தல்களையும் சந்தித்து வந்தார். ஆனாலும் ராஜ் தாக்கரேவின் கட்சிக்கு பெரியளவில் வெற்றிகள் கிடைத்ததில்லை. இருந்த போதிலும் மராட்டி மண்ணின் காவலர் என்ற பெயருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். ராஜ் தாக்கரே கட்சியினர் மராட்டி மொழி, மாநில உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளில் முன் நின்று போராட்டி வருகிறார்கள்.
தற்போது ஆளும் பாஜக அரசு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்கி உள்ளதற்கு மஹாராஷ்ட்ராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருவரும் மராட்டி மொழிக்காக ஒன்றிணைந்து போராடவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ராஜ் தாக்கரேவின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு உத்தவ் தாக்கரே சென்று வரும் நிலையில் இருவரின் அறிவிப்பும் மஹாராஷ்ட்ரா அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து வர உள்ள மும்பை மாநகராட்சித் தேர்தலில் இரண்டு சேனா கட்சிகளும் ஒரே அணியில் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.