மண்ணுக்குள் புதைந்த கிராமம்.. மகாராஷ்டிரா நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்த சோகம்!!

 
Landslide

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு கிராமமே புதையுண்டு 18 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி என்ற மலை கிராமத்தில், கடந்த புதன்கிழமையன்று நள்ளிரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில், அந்த கிராமமே புதையுண்டு, வீடுகள் தரைமட்டமாகின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் 16 பேரை சடலமாகவும் 20-க்கும் மேற்பட்டோரை காயங்களுடனும் மீட்டனர்.

Landslide

மேலும், 100க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் சிக்கி உள்ள நிலையில், மீண்டும் பெய்த மழையால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. வானிலை சற்று இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து, மீண்டும் மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் மற்றும் மருத்துவக் குழுக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன.

மீட்புப் பணிகளில் உள்ளூர் மற்றும் மலையேற்ற வீரர்களும் ஈடுபட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, மலையின் உச்சியில் உள்ளதாலும், மழை காரணமாக மலைப்பாதைகள் வழுக்குவதாலும் ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாமல் மீட்புப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.


மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் இடைவிடாமல் பருவமழை பெய்து வருகிறது. பஞ்சகங்கா நதியின் நீர்மட்டம் உயர்ந்ததால் கோலாப்பூரில் வெள்ளம் புகுந்தது.ஒடிசாவின் மல்கங்கிரி, கோராபுட், நவ்ரங்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், சூத்ரபாதா, மங்ரோல், கிர் சோம்நாத் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

From around the web