கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்த முதல் மனைவி..! ஆந்திராவில் நடந்த பரபரப்பு சம்பவம்

 
Tirupati

ஆந்திராவில் தனது கணவருக்கு அவரது காதலியை திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாண். டிக் டாக்கில் பிரபலமான இவர் அடிக்கடி வீடியோக்கள் எடுத்து டிக்டாக் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர். 

இவர்கள் இருவருமே டிக்டாக் வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகின்றனர். இருவருக்கும் டிக் டாக்கில் பின்தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர். இருவரும் இணைந்து வீடியோக்களை உருவாக்கி அதிக பிரபலம் அடைந்தனர். சில மாதங்களாக சோகமாக இருந்த விமலாவிடம் ஏன் என்று கல்யாண் கேட்டு உள்ளார். அப்போது தான் விசாகபட்டனத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவர் தன்னை சந்தித்தகாக் கூறினார். 

Tirupati

கல்யாண் திருமணத்திற்கு முன் விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ உருவாக்கி வந்த நிலையில் இருவரும் காதலித்து உள்ளனர். சில காலம் நன்றாக இருந்த காதல் சில காரணங்களால் முறிந்ததுடன் தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டது. கல்யாண் கடைசியில் அவரை மறந்து விமலாவை மணந்து உள்ளார்.

இந்தநிலையில் தான் நித்யாஸ்ரீ திடீரென இவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து உள்ளார். நேரடியாக விமலாவிடம் சென்று நடந்த விவரத்தை கூறி, கடந்த காலத்தில் இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாகவும், அவரை விட்டு பிரிந்து செல்ல முடியவில்லை என்றும் கதறி அழுதாள். எப்படியாவது எங்களை ஒன்று சேர்த்து வையுங்கள் என்று கெஞ்சியதால், எந்த மனைவியும் செய்யாத ஒரு தியாகத்தை செய்ய விமலா தயாராகிவிட்டார். 

tik-tok

விமலா தனது கணவர் கல்யாணை அவரது காதலி நித்யஸ்ரீயை திருமணம் செய்து வைக்க தயாரானார். ஆனால் தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டார். கல்யாண் முதல் திருமணத்திற்கு பின், 2வது திருமணம் செய்து கொண்டார். இப்போது மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதல் மனைவி விமலாவே முன்னின்று கவனித்ததுள்ளார். கணவனையும் காதலியையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

தற்போது தியாகமூர்த்தி விமலா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். ஆனால் திருமணம் முடிந்து மூவரும் எங்கே போனார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.

From around the web