பண மதிப்பிழப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்தவில்லை - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதனால் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயண் சர்மா உள்ளிட்ட 57 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தனர். நீதிமன்ற வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 22-ம் தேதி ஒத்திவைத்தது.
இந்த நிலையில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், பி.ஆா்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் இன்று தீர்ப்பு அளித்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே எனவும் செல்லும் அந்த நடவடிக்கையை திரும்ப பெற முடியாது எனக் கூறி எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
இந்த தீர்ப்பில், நீதிபதி நாகரத்னா மட்டும் வேரொரு தீர்ப்பை வழங்கி இருந்தார். அவர் தீர்ப்பில், ஒரே அரசாணை மூலம் 1000, 500 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தது தவறு. பணமதிப்பிழப்பு போன்ற முக்கிய முடிவுகளை நாடாளுமன்றத்தில் தெரிவிக்காமல் எடுக்கக்கூடாது என தெரிவித்தார்.
மேலும், மத்தய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரிசர்வ் வங்கியின் முடிவை எடுப்பது ஏற்க்கத்தக்கதல்ல. பணமதிப்பிழப்பு முடிவை ரிசர்வ் வங்கியே பரிந்துரைக்க முடியும் என தெரிவித்த அவர், தரவுகளை பார்க்கும் போது ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்படவில்லை என தெரிவதாக கூறினார்.
மொத்த முடிவும் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பணமதிப்பிழப்பு ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார். மேலும் பணமதிப்பு செய்யப்பட்ட பின் தற்போது என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.
இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிபதி, இந்த நடவடிக்கையால் 98% ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையால் பலன் இல்லை என தெரிவித்தார். மேலும் பணமதிப்பிழப்பை அதன் நோக்கத்தின் அடைப்படையில் சட்டவிரோதம் என கூறவில்லை என விளக்கமளித்த நீதிபதி, அதை செயல்படுத்திய விதம் சட்டவிரோதமானது என தெரிவித்தார். மேலும் பணமதிப்பால் ஏற்படும் பிரச்சனைகளை கவனிக்க மத்திய வங்கிகள் தவறிவிட்டன என கூறினார்.