இந்தியாவில் தேசிய கட்சியா..? அப்படி எதுவும் இல்லை - தெலுங்கானா அமைச்சர் பரபரப்பு பேச்சு

 
No-National-party-in-india

இந்தியாவில் தேசிய கட்சி என்று எந்த கட்சியும் இல்லை என தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமராவ் இன்று கூறியுள்ளார்.

தெலுங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை திட்டமிட்டு செய்து வருகிறது.

இந்த சூழலில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி, பிரசாந்த் கிஷோர் முன்பு தலைமையேற்று நடத்திய ஐபேக் அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கிஷோருடன் ரூ.300 கோடியளவில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டது. ஆனால், இதனை சந்திரசேகர ராவ் திட்டவட்டமுடன் மறுத்துள்ளார்.

இந்நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமராவ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நாட்டில் தங்களை தேசிய கட்சி என்று கூறி கொள்வதற்கு எந்தவொரு கட்சியும் இல்லை.

பாஜகவை எடுத்து கொண்டால் தென்பகுதியில் ஒரே ஒரு மாநிலத்திலேயே காணப்படுகிறது. காங்கிரசை ஒரு தேசிய கட்சி என்று நீங்கள் கூறுவீர்களானால், உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் அதன் நிலைமை என்ன என நமக்கு தெரியும்.

இந்தியாவில் தேசிய கட்சி என்று எந்த கட்சியும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். பாஜக ஒரு வடஇந்திய கட்சி.  காங்கிரஸ் ஒரு சில மாநிலங்களில் குறுகி விட்டது.

ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்களுடைய செயல் திட்டங்களை மக்கள் முன் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எது பெரிய கட்சி, எது சிறியது என்று மக்களே முடிவு செய்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

From around the web