அமைச்சர் ரோஜா செல்போன் மாயம்... திருப்பதியில் பரபரப்பு!!

 
Minister-Roja-cell-phone-missing-in-Tirupati

திருப்பதியில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜாவின் செல்போன் மாயமானது குறித்து ஒப்பந்த ஊழியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற ரோஜா நேற்று திருப்பதிக்கு வந்தார். திருப்பதியில் உள்ள எஸ்வி பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார்.

கூட்ட அரங்கில் கலந்து கொண்ட அவரின் செல்போன் திடீரென மாயமானது. இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் எஸ்வி பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்யும் நபர் மேஜையில் இருந்த செல்போனை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த தற்காலிக ஊழியர் இடமிருந்து போலீசார் செல்போனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்ட் பரமேஸ்வரி ரெட்டி கூறுகையில், அமைச்சர் ரோஜாவின் செல்போன் திருடு போகவில்லை. கவனக்குறைவாக மேசையில் செல்போனை வைத்து விட்டு அமைச்சர் ரோஜா கூட்ட அரங்கிற்கு சென்றார்.

அப்போது கேட்பாரற்று விழுந்த செல்போனை தற்காலிக ஊழியர் எடுத்து வைத்துக்கொண்டார். தற்காலிக ஊழியருக்கு மேசையிலிருந்தது அமைச்சர் ரோஜாவின் செல்போன் என தெரியாது. காணாமல் போன செல்போனை தற்போது அமைச்சர் ரோஜாவிடம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அமைச்சர் ரோஜாவின் செல்போன் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

From around the web