சொகுசு பேருந்து - டிரக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 10 பேர் பலி.. சீரடிக்கு சென்றபோது நேர்ந்த சோகம்!

 
Nashik

சீரடிக்கு தனியார் பேருந்தில் சென்றுபோது விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது நாசிக். இங்கு உள்ள சின்னார் தாலுகாவில் உள்ள பதரே ஷிவார் அருகே இன்று தனியார் சொகுசு பேருந்தும் - டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படு காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 7 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவர்.

Nashik

இதைத் தொடர்ந்து விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதோடு மட்டுமின்றி, விபத்தில் சிக்கியவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காலை சுமார் 7 மணி அளவில் நடைபெற்ற இந்த கோர விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் சாய்பாபாவை தரிசனம் செய்வதற்காக சீரடிக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. ஆனால் விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.


தொடர்ந்து விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கோர சம்பவம் நிகழ்ந்ததையடுத்து அம்மாநில முதல்வர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளார்.

From around the web