விருப்பமில்லாத திருமணம்.. பரிசு தருவதாக கூறி மணமகனின் கண்ணை கட்டி கழுத்தை அறுத்த மணமகள்!!

 
Ahead-of-marriage-girl-attempts-to-murder-groom-in-AP

ஆந்திர மாநிலம் அனாகபள்ளி மாவட்டம் மாடு குளமங்கலம் அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமாநாயுடு (வயது 28). ஐதராபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார். ராமா நாயுடுவுக்கும் ராதிக மாட்டம் கிராமத்தை சேர்ந்த புஷ்பா (வயது 22) என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்தது. அவரது திருமணம் மே 26-ம் தேதி நடைபெறவிருந்தது.

இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என புஷ்பா அவரது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இருப்பினும் அவரது பெற்றோர் புஷ்பாவுக்கு வலுக்கட்டாயமாக திருமண ஏற்பாடுகளில் செய்து வந்தனர்.

புஷ்பாவின் பெற்றோர் உறவினர்களுக்கு பத்திரிகை வைப்பதற்காக வெளியூர் சென்று இருந்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புஷ்பா மணமகனுக்கு போன் செய்து பரிசு தருவதாக வரவழைத்தார். மணமகன் வந்ததும் அவரை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். திருமணத்திற்கு முன்பாக இருவரும் கேக் வெட்டி கொண்டாடலாம் என கூறி கேக் வாங்கிக்கொண்டு புஷ்பா வீட்டிற்கு சென்றனர்.

கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டனர். அதன் பின்னர் இன்ப அதிர்ச்சி தரக்கூடிய பரிசு வழங்க உள்ளதால் கண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டும் என மணமகனிடம் புஷ்பா தெரிவித்தார். இதற்கு மணமகன் சம்மதம் தெரிவித்ததால் தன்னுடைய துபட்டாவை  எடுத்து மணமகனின் கண்ணை கட்டினார். பின்னர் திடீர் என தான்  மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணமகனின் கழுத்தை அறுத்தார்.

மணமகனின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பா மணமகனை அனகா பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அப்போது டாக்டர்களிடம் மணமகன் தடுக்கி விழுந்ததில் கத்தியின் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் இதுகுறித்து புதிய பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மணமகளை தேடி வருகின்றனர். தனக்கு விருப்பமில்லாமல் திருமண ஏற்பாடு செய்ததால் மணமகனின் கழுதை மணமகள் அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web