இசை மேஸ்ட்ரோவை அவமதிப்பதா? பாஜக தேசிய தலைவர் கண்டனம்

 
musician-insulting-Ilayaraja-BJP-National-leader-condemned

பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதற்காக இசைஞானி இளையராஜாவை அவமதிப்பதா? என பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேதகருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார். அது மாநில மற்றும் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு தரப்பினர் அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது கருத்தை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டேன் என இளையராஜா திட்டவட்டமாக தன்னிடம் தெரிவித்ததாக அவரது சகோதரர் கங்கை அமரன் தகவல் கொடுத்திருந்தார். இத்தகைய சூழலில் பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா இந்த விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

“தமிழ்நாட்டை ஆளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை அவமதித்து வருகிறார்கள். ஆளும் தரப்புக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமாகவும் இளையராஜா பேசவில்லை என்பதற்காக நாட்டின் ஆகச்சிறந்த இசைமேதையை இப்படி இழிவு செய்து வருகின்றனர். அவரது கருத்து என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். இசை மேஸ்ட்ரோவை அவமதிப்பது நியாயமாகாது.

இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், மராட்டியம்  உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. தொண்டர்கள்  குறிவைத்து தாக்கப்படுகின்றனர். இது மாதிரியான சம்பவங்களில் எதிர்கட்சிகள் சகிப்புத்தன்மையின்றி நடந்து கொள்கின்றன” என கூறியுள்ளார்.

From around the web