மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய ஆசிரியை... ராஜஸ்தானில் நடந்த சம்பவம்
Updated: Nov 8, 2022, 18:56 IST
ராஜஸ்தானில் மாணவியை திருமணம் செய்து கொள்ள உடற்கல்வி ஆசிரியை ஆணாக மாறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் மீரா. அதே பள்ளியில் கல்பனா என்ற மாணவி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் உடற்கல்வி வகுப்புகளின்போது மீரா மாணவி கல்பனாவை சந்தித்துள்ளார்.
அப்போது அவர் கல்பனா மீது காதல் வயப்பட்டுள்ளார். பள்ளி காதல் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், கல்பனாவை திருமணம் செய்துக்கொள்ள ஆணாக மாற மீரா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து உடற்கல்வி ஆசிரியை மீரா கூறுகையில், "காதலில் எல்லாம் நியாயமானது. அதனால்தான் நான் என் பாலினத்தை மாற்றிக் கொண்டேன்" என்று ஆணாக மாறி ஆரவ் என்று பெயர் மாற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஆரவ் கூறுகையில், "நான் பெண்ணாக பிறந்தேன். ஆனால் நான் எப்போதும் ஒரு ஆணாக இருக்கவே விரும்பினேன். இதற்காக பாலினத்தை மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டேன். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் எனது முதல் அறுவை சிகிச்சையை செய்தேன்" என்றார்.
இதுகுறித்து கல்பனா கூறுகையில், " நான் அவரை ஆரம்பத்திலிருந்தே விரும்பினேன். அவர் இந்த அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன். அறுவை சிகிச்சைக்கு அவருடன் சென்றேன்," என்றார்.
கல்பானா மாநில அளவில் கபடி விளையாடிய நிலையில், வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச கபடி போட்டிக்காக துபாய் செல்லவுள்ளார்.