கால்வாயை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் சிக்கியது!! ஆசிரியர் பத்திரமாக மீட்பு

 
Andhra

ஆந்திராவில் அனைவரும் பார்த்து கொண்டிருக்கும்போதே கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதித்த மக்களை பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆந்திராவின் ஏலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை கரிக்கல்பாடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் கண்ணய்யா வழக்கம்போல் காரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கொய்யாலகுடேம் மண்டலத்தில் உள்ள கண்ணபுரம் மேற்கு கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Andhra

இதனால், அவ்வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் கால்வாயை கடந்து செல்லாமல் சாலையிலேயே நின்று கொண்டிருந்தன. ஆனால், கண்ணய்யா கால்வாயை காரில் கடந்து சென்று விடலாம் எண்ணி காரை இயக்கிய சிறிது நேரத்தில் ஆற்றில் வெள்ளநீர் அதிகரித்ததால் கார் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

இதையடுத்து, காரில் இருந்த ஆசிரியர் கண்ணய்யாவை அப்பகுதிமக்கள் கயிறு மூலமாக பத்திரமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து, காரை கயிறு கட்டி மீட்க முயற்சி செய்த நிலையில் காரில் கட்டப்பட்ட கயிறு அறுந்ததால் வெள்ளநீரில் கார் அடித்து செல்லப்பட்டது.


அனைவரும் பார்த்து கொண்டிருக்கும்போதே கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்தவர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

From around the web