கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பரிதாப பலி! பலர் கவலைக்கிடம்.. பீகாரில் நடந்த சோகம்!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள பன்னபூர் கிராமத்தில், கடந்த 2-ம் தேதி மத நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு சிலர் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். அதில் 2 பேர் சாராயம் அருந்திய இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இதன் பக்கவிளைவாக, கள்ளச்சாராயம் அருந்திய பலருக்கும் கண் பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பலர், பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சாப்ரா சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் இந்த இறப்பிற்கான காரணத்தை கண்டறிய மருத்துவர்கள் குழு பனன்பூர் கிராமத்திற்கு சென்றுள்ளதாகவும், இதுகுறித்த விசாரணை நடத்தி, மது கடத்தல்காரர்களை பிடிக்க அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மீனா கூறியுள்ளார்.
இதுகுறித்து சரண் சரக எஸ்.பி சந்தோஷ் குமார் கூறுகையில், “ஆகஸ்ட் 2-ம் தேதி அன்று நாக பஞ்சமி கொண்டாட்டத்தின் போது கிராமத்தில் சிலர் மது அருந்தினர். மர்ஹவுரா மற்றும் சோன்பூர் டிஎஸ்பிகள் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம். இறப்புக்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்றார்.
கடந்த ஏப்ரல் 2016 முதல் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்த போதிலும், கடந்த ஆறு மாதங்களில் நடந்த மூன்றாவது பெரிய கள்ளச்சாராயம் தொடர்பான சம்பவம் இதுவாகும்.