திருமணமான 6 மாதத்தில் ரயில் முன் பாய்ந்த காதல் மனைவி.. மறுநாள் கணவனும் தற்கொலை.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திராவில் திருமணமாகி 6 மாதத்தில் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி மண்டலம், சின்னபொலமடா கிராமத்தைச் சேர்ந்த பாலபுள்ளையா. இவரது மனைவி ஓபுலம்மா. இந்த தம்பதியின் மகன் மஞ்சுநாத் (27). புட்லூர் மண்டலம் கருச்சிந்தலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமாஞ்சநேயுலு - லட்சுமிதேவியின் மகள் ரமாதேவி (24). மஞ்சுநாத்தும் ரமாதேவியும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் முதலில் சம்மதிக்கவில்லை. இருவரும் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர்.
இந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை சலவாரிப்பள்ளி கிராமம் அருகே ரயில் முன் பாய்ந்து ரமாதேவி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் கணவருடன் மொபைலில் பேசி உள்ளார்.
மனைவி ரமாதேவி இறந்த செய்தியறிந்த மஞ்சுநாத்தும் திங்கள்கிழமை இரவு இரண்டு முறை ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார். ஆனால் குடும்பத்தினர் அவரை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால் நேற்று அதிகாலை 3 மணியளவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மஞ்சுநாத் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அதன்பின் தாடிபத்திரி ரயில் நிலையம் அருகே வந்த அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மருமகன் மஞ்சுநாத் குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்து கொண்டதாக ரமாதேவியின் பெற்றோர் ஜிஆர்பி போலீசில் புகார் அளித்து உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.