பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் பலி.. உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.. அதிர்ச்சி தகவல்

 
Army

பஞ்சாப் ராணுவ முகாமில் நேற்று அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் ராணுவ முகாம் அமைந்துள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி உள்ளனர். அந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிகளால் சரமாரியாக சுடும் சத்தம் கேட்டது. உள்ளே பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே, ராணுவத்தின் அதிவிரைவுப்படை முடுக்கி விடப்பட்டது. அப்படையினர் முகாமுக்குள் நுழைந்தனர். முகாமை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால், பயங்கரவாதிகள் யாரும் உள்ளே இல்லை. 

துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், 4 ராணுவ வீரர்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பெயர்கள் சாகர் பன்னே (25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரிய வந்தது. சாப்பாட்டு கூடத்துக்கு பின்னால் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

gun

இதில் இறந்தவர்களில் ஒருவரான கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதி ஆகும். இவருடைய தந்தை ரவி நெசவு தொழிலாளி. ராணுவ வீரரின் தாயார் செல்வமணி. இவர்களின் 2-வது மகனான கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். 

திருமணம் ஆகாத நிலையில், பஞ்சாப்பில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட கமலேஷ் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து விட்டு் திரும்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேசுக்கு சந்தோஷ் (27) என்ற அண்ணன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் பலி.. உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என அதிர்ச்சி தகவல்

அதேபோல், உயிரிழந்த மற்றொரு வீரரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தேனியை சேர்ந்த யோகேஷ் குமார் (24) என்ற வீரரும் உயிரிழந்துள்ளார். பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாடு வீரர்கள் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web