15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்!

பஞ்சாபில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். தடகள விளையாட்டில் ஆர்வம் கொண்ட இந்த சிறுமி, தினமும் மாலை தனது கிராமத்தில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில், சிறுமி கடந்த 30-ம் தேதி மாலை கிராமத்தில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமியை இடைமறித்த அதே பகுதியை சேர்ந்த இளைஞன் சிறுமிக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றான்.
பின்னர், காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த அதே கிராமத்தை சேர்ந்த மேலும் 3 இளைஞர்களுடன் சேர்ந்து சிறுமியை அந்த இளைஞன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். தனக்கு நடந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.