ரயில் மோதி 11 வயது சிறுவன் பலி.. பழம் பறிக்க சென்ற போது விபரீதம்.. உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!

உத்தரபிரதேசத்தில் பழம் பறிக்க முயன்ற 11 வயது சிறுவன் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பராக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷா ஆலம். 11 வயதான இந்த சிறுவன், தனது நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ரயில்வே தண்டவாளம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த புதரில் பழங்கள் இருப்பதை பார்த்த சிறுவன் அங்கு சென்று பழங்களை பறித்துக் கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியே வந்த ரயில் ஒன்று சிறுவன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்கள் விரைந்து சென்று பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் மோதி 11 வயது சிறுவன் பலியான சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களை இதுபோன்று ரயில்வே தண்டவாளம் அருகே விளையாட அனுப்பக் கூடாது என பெற்றோர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.