விருத்தாசலம் அருகே மூதாட்டியை அடித்துக்கொன்ற இளம்பெண்.. திருமணம் செய்து வைக்காததால் விபரீதம்!

 
Karuvepilankurichi

விருத்தாசலம் அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் பேத்தியே, பாட்டியை அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பேரளையூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மனைவி தனலட்சுமி (70). இவரது மகன் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி புஷ்பவள்ளி. இந்த தம்பதிக்கு சிவக்குமார் என்ற மகனும், சிவரஞ்சனி, சிவசத்யா (25) என்ற 2 மகள்களும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர்செல்வமும், 10 ஆண்களுக்கு முன்பு சிவக்குமாரும் இறந்துவிட்டனர்.

சிவரஞ்சனி திருமணமாகி கருவேப்பிலங்குறிச்சியில் வசித்து வருகிறார். சிவசத்யா மட்டும் திருமணம் ஆகாத நிலையில், தனது தாய் புஷ்பவள்ளி மற்றும் பாட்டி தனலட்சுமியுடன் வசித்து வந்தார். தனது சகோதரர் சிவக்குமார் உயிரிழந்த நாளில் இருந்து சிவசத்யா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

Dead Body

இந்த நிலையில், சிவசத்யா கடந்த சில நாட்களாக தனது பாட்டி தனலட்சுமியிடம், எனக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் மாலையும், சிவசத்யா தனது பாட்டியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சிவசத்யா பாட்டி என்றுகூட பாராமல் அருகில் கிடந்த இருப்புக்கம்பியை எடுத்து தனலட்சுமியை சரமாரியாக தாக்கினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த தனலட்சுமி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சிவசத்யா நடந்த சம்பவம் குறித்து பக்கத்து வீட்டில் இருந்த தனது தாயிடம் கூறினார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு வந்த புஷ்பவள்ளி, தனலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

Karuvepilankurichi PS

இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார், தனலட்சுமியின் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சம்பவம் தொடர்பாக சிவசத்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் நான் தான் பாட்டியை கொன்றேன். ஆனால், என் அருகில் போலீசார் யாராவது வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்ய முடியாமல், வேறு வழியின்றி வீட்டிலேயே காவலில் வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web