நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி.. கிருஷ்ணகிரியில் பயங்கரம்

 
Krishnagiri

காவேரிப்பட்டணம் அருகே புதுமாப்பிள்ளை கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ராம்குமார் (26). இவர், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் சூளகிரி பகுதியை சேர்ந்த சுஜாதா (23) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகராறு குறித்து நாகரசம்பட்டி காவல் நிலையத்துக்கு புகார் சென்று போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று காலையில் ராம்குமார் தலையில் ரத்தக் காயங்களுடனும், ஒயரால் கழுத்து இறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Murder

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னர். இதற்கிடையே கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததால் சந்தேகத்தின் பேரில் போலீசார், சுஜாதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது திருமணமானது முதல் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுஜாதா தனது கணவன் மீது கோபத்தில் இருந்துள்ளார். காவல் நிலையம் வரை தகராறு விவகாரம் சென்றதால் ஆத்திரமடைந்த அவர் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக சூளகிரியை பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான கணேசன் (19), மோகன் (18) ஆகியோரின் உதவியை நாடினார். அவர்களும் கொலை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

Nagarasampatti PS

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ராம்குமார் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அப்போது கணேசன், மோகன் ஆகியோர் சுஜாதா வீட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த ராம்குமாரின் கழுத்தை ஒயரால் இறுக்கினர். மேலும் தலையில் பயங்கரமாக தாக்கினர். இதில் ராம்குமார் ரத்த கயங்களுடன்  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து கணேசன், மோகன் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் நேற்று காலை கொலையை மறைப்பதற்காக சுஜாதா தனது கணவன் வாயில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக அழுது நாடகமாடி உள்ளார். எனினும் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சுஜாதா, கணேசன், மோகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

From around the web