பட்டாசு வெடித்து 9 வயது சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம்.. கோவில் திருவிழாவின் போது சோகம்!

 
Salem
சேலம் அருகே கோயில் திருவிழாவின் போது, பட்டாசு வெடித்த விபத்தில், சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் குழி இருசாயி அம்மன் கோவில் தெவத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒருபகுதியாக இன்று காலை வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது இடைப்பாடி இளவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (26) என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பட்டாசு வைத்திருந்தார்.

அப்போது வானத்தில் வெடித்து சிதறிய தீப்பொறி ஒன்று இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாசு பாக்சின் மீது பட்டு வெடித்து சிறியது. இதில் இருசக்கர வாகனத்தின் மீது உட்கார்ந்து இருந்த சக்திவேலுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அதேபோல் திருவிழாவை பார்க்க வந்திருந்த ஓமலூர் கமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் கவின் (9) என்பவரும் பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்தார்.

Salem

இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டாசு வெடி விபத்தில் தீக்காயம் அடைந்த இருவருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மருத்துவமனையின் டீன் மணி கூறுகையில், திருவிழாவின் போது பட்டாசு வெடி விபத்தில் சக்திவேல், கவின் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதில் சக்திவேல் என்பவருக்கு 75 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்தால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.


இதனிடைய பட்டாசு வெடி விபத்தின் போது திருவிழா பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை ரோந்து வாகனம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியை காட்சிகளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ரோந்து வாகனத்தின் பின்புறம் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்படும்போது சுதாரித்து கொண்ட ரோந்து வாகனத்தின் ஓட்டுனர் உடனடியாக ரோந்து வாகனத்தை அவசரமாக எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

From around the web