திருடச் சென்ற வீட்டில் அயர்ந்து உறங்கிய திருடன்.. அரைநிர்வாண திருடனை மடக்கிப்பிடித்த போலீஸ்!

 
Nachiyarpuram

திருப்பத்தூர் அருகே திருடச்சென்ற இடத்தில் மது அருந்தி போதையில் தூங்கிய திருடன், காலையில் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கியிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் தற்போது காரைக்குடியில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். விடுமுறை மற்றும் திருவிழா நாள்களில் நடுவிக்கோட்டை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அதனால், அந்த வீட்டில் ஃபர்னிச்சர் பொருள்களை மட்டும் வைத்திருந்திருக்கிறார். 

இந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் பாண்டியன் வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டின் உரிமையாளருக்குத் தகவல் கொடுத்து இருக்கின்றனர். அதையடுத்து, வீட்டின் உரிமையாளர் பாண்டியன், நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசாரும் விரைந்து வந்திருக்கின்றனர். உள்ளே செனறு பார்த்தபோதுதான் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. 

nachiyarpuram

வீட்டைப் பிரித்து உள்ளே சென்ற அந்தத் திருடன் ஹாயாகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்திருக்கிறார். தட்டி எழுப்பி விசாரித்தபோது, சைகையிலேயே ‘நீங்க எல்லாம் யாரு, விடிஞ்சுருச்சா?’ என்று கேட்டு போலீசாருக்கே அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். உடனே, வீட்டு உரிமையாளரின் உறவினர்கள் அந்தத் திருடனுக்கு தர்ம அடி கொடுத்திருக்கின்றனர். 

போலீசாரின் தயவால் அவர்களிடமிருந்து தப்பித்த திருடனை, போலீசார் திருடனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். விசாரணையில், அந்தத் திருடன் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர நாதன் என்பது தெரியவந்தது.

nachiyarpuram PS

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “ஏற்கெனவே ஒரு திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்று, திருப்பத்தூரிலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோதுதான், ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு வீட்டுக்குள்  சுதந்திர நாதன் இறங்கியிருக்கிறார். பூட்டிக்கிடந்த வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய சுதந்திர நாதன், அங்கிருந்த குத்துவிளக்கு, மின்விசிறி உள்ளிட்ட பண்ட பாத்திரங்களை பத்திரமாக மூட்டை கட்டிவைத்துவிட்டு, நள்ளிரவில் கிளம்பலாம் என்று நினைத்து மது அருந்தியிருக்கிறார். 

மது அருந்திவிட்டு, பொருள்களை மூட்டை கட்டிவிட்டு ஏன் கிளம்பவில்லை என்று கேட்டபோது, ‘கட்டில் மெத்தையில் படுத்திருந்து நள்ளிரவுக்கு மேல போகலாம்னு நெனைச்சேன். ஹெட்போனில் கொஞ்ச நேரம் இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கிட்டே அயர்ந்து உறங்கிட்டேன்’ என்று கூலாகக் கூறினார்” என்றனர். 

From around the web