பெற்ற குழந்தைகளை தூக்கிலிட்ட தாயும் தற்கொலை.. திருச்சி அருகே சோகம்!!

 
Tirchy

 திருச்சி அருகே 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் கே.ஆர்.எஸ்.நகர் விரிவாக்கப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மனோஜ்குமார் (30). இவருடைய மனைவி ஷோபனா (26). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் தக்ஷிவன் (3), கபிக்ஷன் (11 மாதம்) என்ற 2 ஆண் குழந்தைகள் இருந்தனர். மனோஜ்குமார் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் சொந்தமாக பர்னிச்சர் கடை நடத்தி வந்தார்.
மனோஜ்குமாருக்கு பெற்றோர் இல்லை. அவருடைய தாயார் 6 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவருடைய உறவினர்கள் தான், ஷோபனாவை பெண் பார்த்து மனோஜ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொரோனா ஊரடங்கு காரணமாக பர்னிச்சர் கடையில் நஷ்டம் ஏற்படவே, அவர் தொழிலை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கினார்.
suicide
தற்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சென்று வருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக மனோஜ்குமார் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு செல்லும்போது, மனோஜ்குமாரை சிகிச்சைக்கு அழைத்து செல்லலாம் அல்லவா? என்று ஷோபனாவிடம் உறவினர்கள் கேட்டுள்ளனர். இதனால், அவர்களின் குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
தனது கணவருக்கு குணமாக வேண்டி ஷோபனா கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட பொள்ளாச்சியில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வந்துள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் மனோஜ்குமார் வெளியூர் சென்றுள்ளார். நேற்று காலை, ஷோபனா தனது இளைய மகனை தூக்கிக்கொண்டு, மனோஜ்குமாரின் உறவினர் வீட்டுக்கு சென்று, இப்படி மனநிலை பாதிக்கப்பட்டவரை எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டீர்களே? என்று கேட்டு, அழுது புலம்பியதாக தெரிகிறது.
இந்த நிலையில் மன அழுத்தத்தில் இருந்த ஷோபனா வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று பகலில் தனது 2 குழந்தைகளையும் துப்பாட்டவால் தூக்கில் தொங்கவிட்டு கொன்றுவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதியம் ஊருக்கு திரும்பிய மனோஜ்குமார் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டி இருந்தது. இதனால் அவர் கதவை பல முறை தட்டியும் கதவை திறக்க முடியவில்லை.வீட்டின் உள் அறையில் ஏ.சி. போட்டு தூங்குவதால் கதவை திறக்கவில்லை என்று நினைத்து, மனோஜ்குமார் சென்றுவிட்டார்.பின்னர் மாலையில் வந்து மீண்டும் கதவை தட்டியபோதும் கதவை திறக்கவில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண் போலீசிடம் அவர் கூறவே, அவரும் அங்கு வந்து ஷோபனாைவ அழைத்து பார்த்துள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. செல்போனில் அழைத்தும் ஷோபனா செல்போனை எடுக்கவில்லை.
Edamalaipatti Pudur PS
இதனால் சந்தேகம் அடைந்த மனோஜ்குமார், வீட்டின் பின்புறம் பால்கனி வழியாக ஏறி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மனைவி, குழந்தைகள் 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர்களின் உடலை பார்த்து கதறி அழுதபடியே முன்பக்க கதவை திறந்து வெளியே வந்துள்ளார். இதைத்தொடர்ந்து எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே ஷோபனாவின் தாய் ராஜேஸ்வரி மற்றும் உறவினர்கள் அங்கு வந்து, ஷோபனா மற்றும் குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
மாநகர துணை போலீஸ் கமிஷனர் அன்பு, உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபிஉமா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
ஷோபனாவுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் திருச்சி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web