போதையில் ஓயாமல் டார்ச்சர் கணவன்.. ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்..!

 
Chennai

சென்னை நுங்கம்பாக்கத்தில் தினமும் குடித்துவிட்டு டார்ச்சர் செய்து அடித்து கொடுமைப்படுத்திய கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (44). இவர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கனகவல்லி (34). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலகிருஷ்ணன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

Murder

வழக்கம் போல் நேற்று இரவும் பாலகிருஷ்ணன் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கனகவல்லி குடிபோதையில் இருந்த கணவரை பிடித்து தள்ளியுள்ளார். அப்போது சுவற்றில் மோதி விழுந்த பாலகிருஷ்ணன் தலையில் மோதியதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து மயங்கினார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி கனகவல்லி உடனே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Nungambakkam PS

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மனைவி கனகவல்லியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web