திமுக கவுன்சிலர் மகனை காதலித்த சிறுமி.. போர்த்திய போர்வையுடன் சடலமாக மீட்பு.. குளித்தலையில் சோகம்!

குளித்தலை அருகே, கிணற்றில் இருந்து 16 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கலைவாணி. இந்த தம்பதிக்கு தேவிகா (16), விக்னேஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். தேவிகா 11ம் வகுப்பு வரை படித்துவிட்டு, கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ் பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி வீட்டில் இருந்த தேவிகா நள்ளிரவில் காணவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் தேவிகாவின் தாய் கலைவாணி புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை தேவிகா ஊருக்கு அருகாமையில் உள்ள குஞ்சப்பன் என்பவரது விவசாய கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து நங்கவரம் வடக்கு 1 கிராம நிர்வாக அலுவலர் சண்முக சுந்தரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி, சப்-இன்ஸ்பெக்டர் ரூபிணி, முசிறி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து தேவிகாவின் உடலை கைப்பற்றி மேலே கொண்டு வந்தனர். அப்போது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் குளித்தலை போலீசார் தேவிகாவின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் எனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குளித்தலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேவிகாவை கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டர்ரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தேவிகாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அரங்கு முன்பு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அப்போது தேவிகாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை கொலை செய்து கிணற்றில் வீசி விட்டதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தேவிகாவின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டு மறியலை விலக்கி கொண்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.