அதிர்ச்சி..வேறு சாதி வாலிபரை காதலித்த மகள்.. ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து ஆணவக்கொலை செய்த தந்தை!

 
Karnataka

கர்நாடகாவில் வேறு சாதி வாலிபரை காதலித்ததால் ஆத்திரத்தில் மகளின் கழுத்தை அறுத்து தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (45). இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு கவனா (20) உள்பட 2 மகள்கள் உள்ளனர். கவனா தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்தார். மஞ்சுநாத்தின் 2-வது மகள், வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மஞ்சுநாத் தனது மகளை கண்டித்துள்ளார். எனினும் அந்த இளம்பெண், தனது தந்தையின் பேச்சை கேட்காமல் இருந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி அந்த இளம்பெண், தனது காதலனுடன் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து இளம்பெண்ணுக்கு 17 வயதே ஆவதால் அவரை, போலீசார் மகளிர் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் தனது தங்கைக்கு, கவனா உதவி செய்திருக்கலாம் என்று மஞ்சுநாத் சந்தேகித்தார். மேலும் அவர் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இதற்கிடையே அவரது மூத்த மகள் கவனா, தான் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறி உள்ளார். 

Murder

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத், காதலை கைவிடுமாறு கூறி மகளிடம் வாக்குவாதம் செய்தார். கவனா தனது காதலை கைவிட்டு விட்டதாக தந்தையிடம் கூறி உள்ளார். எனினும் மஞ்சுநாத் தனது மகளை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளார். அப்போது கவனா, காதலை கைவிடாமல் இருந்து வந்தது மஞ்சுநாத்திற்கு தெரிந்தது. இதுதொடர்பாக அவர் தனது மகளிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார். 

நேற்று முன்தினம் மாலையில் கவனாவுக்கும், அவரது தந்தை மஞ்சுநாத்துக்கும் இடையே காதல் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது மகளை கடுமையாக திட்டியதுடன், இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கவனா மயங்கி விழுந்தார். அப்போது கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் தனது மகள் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கவனா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மஞ்சுநாத், விஸ்வநாதபுரம் போலீசில் சரண் அடைந்தார். மேலும் தனது மகளை ஆணவக்கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். உடனே அவர்கள் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் கவனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Police

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கவனா, வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் அவரை மஞ்சுநாத் கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து மஞ்சுநாத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக தகவல் அறிந்ததும், புறநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தம் கொலை நடந்த வீட்டிற்கு வந்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை மகள் காதலித்ததால் ஆத்திரத்தில், பெற்ற மகளை மஞ்சுநாத் கொலை செய்துள்ளார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலையில் தாக்கியதில் மயக்கமாக இருந்தபோது கவனாவை அவர் கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது” என்றார்.

From around the web