அதிர்ச்சி.. 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை!

 
Vaiyampatty

மணப்பாறை அருகே தாயை இழந்த எஸ்எஸ்எல்சி மாணவி தனது சித்தியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள வையம்பட்டி குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். இவர், அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது முதல் மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியருக்கு மணிமேகலை (15), சஞ்சய் (16) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி உடல் நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார். அதன் பின்னர் ராஜரத்தினம் கலையரசி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கணவரிடம் விவாகரத்து பெற்றார். பின்னர் கலையரசி ராஜரத்தினத்தை இரண்டாவதாக திருமணம் செய்தார். சித்தி கலையரசி பராமரிப்பில் ராஜரத்தினத்தின் மகள் மணிமேகலை, மகன் சஞ்சய் ஆகியோர் இருந்தனர். இதில் மணிமேகலை திருச்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதியில் தங்கி எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். சஞ்சய் அருகாமையில் உள்ள ஒரு ஐடிஐ பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.

suicide

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு 3 தினங்களுக்கு முன்பு மணிமேகலை ஊருக்கு சென்றார். நேற்று இரவு சித்தி கலையரசியுடன் மணிமேகலைக்கு மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இறந்த தனது தாயார் மகாலட்சுமியின் சேலையை கலையரசி அணிந்து இருந்ததை கண்டு மணிமேகலை எதற்காக எனது தாயாரின் சேலையை எடுத்து அணிந்தீர்கள் என கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் படுத்து தூங்கினர். மணிமேகலை தனி அறையில் போய் படுத்துக் கொண்டார். நேற்று அதிகாலை வெகு நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த தந்தை ராஜரத்தினம் மகளின் அறை கதவை தட்டினார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. எந்த சத்தமும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் கதவை உடைத்து பார்த்த போது மணிமேகலை பேன் கொக்கியில் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். 

Vaiyampatty PS

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து கலையரசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை இழந்த எஸ்எஸ்எல்சி மாணவி தனது சித்தியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

From around the web