செவிலியர் தூக்கிட்டு தற்கொலை.. உயிரிழப்பில் சந்தேகம் என உறவினர்கள் சாலை மறியல்!

 
Kumbakonam

கும்பகோணத்தில் பாஜக பிரமுகரின் மருத்துவமனையில் இளம் செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா மணலூர் திருமாந்துறை தோப்புத் தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகள் வைஷ்ணவி (22).  நர்சிங் படித்துள்ள இவர், கும்பகோணத்தில் பாஜக சிந்தனை பிரிவு மாநில துணை தலைவர் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான ‘பாமா சுப்ரமணியம்’ என்ற மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

வைஷ்ணவி வேலை பார்க்கும் மருத்துவமனையில் 3-வது மாடியில் செவிலியர்கள் தங்கி பணிபுரிய அறைகள் உள்ளன. இந்த தங்கும் அறையில் சக செவிலியர்களுடன் வைஷ்ணவியும் தங்கியிருந்து சில மாதங்களாக அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு அறைக்கு சென்ற வைஷ்ணவி நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் வைஷ்ணவி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் தனது துப்பட்டாவால் தூக்கில் வைஷ்ணவி பிணமாக தொங்கினார்.

suicide

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வைஷ்ணவி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வைஷ்ணவியின் உறவினர்கள், அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். மேலும் வைஷ்ணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Kumbakonam

தொடர்ந்து வைஷ்ணவி உறவினர்கள், அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். காவல்துறை குடியிருப்பு பகுதி அருகில் ஊர்வலமாக சென்றவர்களை அங்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன், தலைமையில் போலீசார் ஊர்வலமாக சென்றவர்களை 15 மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர்.

அங்கிருந்து 30க்கும் மேற்பட்ட பெண்கள் தனியார் மருத்துவமனை முற்றுகையிட ஊர்வலமாக சென்றபோது அரசு போக்குவரத்து கழகம் அருகே பெண்களையும் வலுக்கட்டயமாக இழுத்து வேனில் ஏற்ற சென்றபோது போலீசாருக்கும் பெண்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிரிழந்த வைஷ்ணவிக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினரும்,உறவினரும் தெரிவித்து வருகின்றனர்.

From around the web